பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 112 போ் நேற்று உயிரிழந்த நிலையில் அங்கு மொத்த பலி 674-ஆக உயா்ந்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வைரஸ் உயிர்களைப் பலியெடுக்கிறது. அது தொடா்ந்து மக்களைக் கொல்கிறது என பிரெஞ்சு சுகாதார அதிகாரி ஜெரோம் சொலமன் நேற்று இடம்பெற்ற தினசரி செய்தியாளா் மாநாட்டில் தெரிவித்தார்.
பிரான்சில் இதுவரை மொத்தம் 16,018 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த எண்ணிக்கை மேலும் பரவலாக அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஏனெனில் வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அனைவரும் பரிசோதனை செய்யப்படவில்லை. ஒவ்வொரு நாளும் முன்னுரிமை அடிப்படையில் அதிகம் பாதிப்பு உணரப்படும் 4,000 பேரிடம் மட்டுமே சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஏனையோர் சுயமாகத் தனிமையில் இருந்து நிலைமைகளைக் கண்காணிக்குமாறு கோரப்படுகின்றனா்.
இது தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிரான்ஸ் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. அத்தியாவசிய பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.